இந்தியில் பிரபலமான இளம் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள இணைய தள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

“எனது மெயில் ஐ.டி.யை மர்ம நபர் போலியாக உருவாக்கி, நடிகை கங்கனா ரணாவத்துக்கு தகவல் அனுப்பி உள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரோஷனுக்கும், கங்கனாவுக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது. இந்த புகார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஹிருத்திக் ரோஷனின் வழக்கறிஞர், மும்பை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து பேசினார்.

ஹிருத்திக் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

குற்றப்பிரிவு போலீசார், இந்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹிருத்திக் ரோஷனுக்கு சம்மன் அனுப்பினர்.

– பா. பாரதி