மும்பை:

ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுதொடர்பாக மேற்கு ரெயில்வேயின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

ரெயில் நிலைய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அமைச்சர் வினோத் தவ்டே அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.