மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழனன்று, சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிவுகண்ட நிலையில், இன்று(ஆகஸ்ட் 21) 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 38,551.15 ஆகவும், தேசியப் பங்குச்சந்தையின் நிப்டி 98.05 புள்ளிகள் உயர்ந்து 11,410.25 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றன.

அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தது. அதன் எதிரொலியாக ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.

உள்நாட்டில் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது, ரூபாயின் மதிப்பு ஏற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 272 புள்ளிகளும், நிப்டி 76 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.