மும்பை:

வான்கடே கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, 27 ஆயிரத்து 524பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

மும்பையில் நேற்று ஒருநாளில் மட்டும் 933 -பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் 512 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தை தற்காலிகமாக தங்களிடம் ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி, மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வான்கடே மைதானத்தில், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கவும், அவசரக்கால பணியில் ஈடுபடும் ஊழியர்களைத் தங்க வைக்கவும் மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.