கொழும்பு: ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மீது தனது நம்பிக்கையில்லை என்றும், இந்தியாவின் அஸ்வினே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

கிரிக்கெட் உலகில் சுழற்பந்துவீச்சாளர்களில் 800 விக்கெட்டுகளை மேல் எடுத்து இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்ன்(708), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே(619) விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அவர் கூறியுள்ளதாவது, “கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வினை மட்டுமே பார்க்கிறேன். அஸ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அஸ்வினைத் தவிர்த்து மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என நான் நினைக்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அப்படி அவர் மீது நம்பிக்கையும் இல்லை. இப்போதுதான் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இனிமேல் அதிகமான போட்டிகளில் விளையாடினால்தான் இலக்கை எட்ட முடியும்.

நான் விளையாடும்போது கிரிக்கெட் போட்டிகளி்ல சமநிலை இருந்தது. ஆனால், இன்று ஒருநாள், டி20 போட்டிகள் வந்தபின் பேட்ஸ்மேன் சார்பாக கிரிக்கெட் மாறிவிட்டது. நான் விளையாடும்போது, ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும்.

பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் ஆடுகளம் சமஅளவு ஒத்துழைக்கும். 3 நாட்களில் ஆட்டத்தை முடிக்க முயற்சி எடுப்போம். பந்துவீச்சாளர்கள் அதிகமான சிரமங்கள் எடுத்து, கடினமாக உழைத்து ஆட்டத்தை விரைவாக முடிக்க முயல்வார்கள்.

ஆனால், இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் நீண்டநேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஏனென்றால், பேட்ஸ்மேன்கள் தாக்குதல் ஆட்டம் ஆடாமல் நீண்டநேரம் நிலைத்து பேட் செய்ய முடியாது.

சுழற்பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பீல்டர்களை நிறுத்தி, லைன்-லென்த்தில் பந்துவீசினால், எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதற்கான சாத்தியங்கள் இப்போது இருக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளர்களைவிட சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆனால், பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்” என்றுள்ளார் முரளிதரன்.