சென்னை: மறைந்த மத்திய அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சி யாக திகழ்ந்தவருமான முரசொலி மாறனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைவர் கலைஞர் அவர்களால் ‘எனது கண்ணின் கருவிழி’ என அழைக்கப்பட்டு, ‘கலைஞரின் மனசாட்சி’ என கழகத்தினரால் போற்றப்பட்ட மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 87வது பிறந்த நாள் இன்று.

இதையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள, முரசொலி மாறன்  திருவுருவச் சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டி ருந்தது.

இந்த சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், தயாநிதி மாறன், ஆலந்தூர் பாரதி உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.