கோவை: கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி அருகே உள்ள என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா. திருநங்கையான இவர், சமூக ஆர்வலர்களிடம் நிதி திரட்டி, கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க மாவட்ட தலைவராக உள்ள சங்கீதா, திருங்கைகளுக்கு பல்வேறு உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவரது உணவகத்தில் பணிபுரியும் 12 பேரும் திருநங்கைகள் என்பதால் மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.
இந் நிலையில், 2 நாட்களாக திருநங்கை சங்கீதா, உணவகத்திற்கு செல்ல வில்லை. சந்தேகமடைந்த உடன் பணிபுரியும் திருநங்கைகள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்க்கும்போது தண்ணீர் நிரப்பி வைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. உள்ளே அழுகிய நிலையில் திருநங்கை சங்கீதாவின் சடலம் இருப்பதை கண்டறிந்தனர்.
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அவர்கள் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.