இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இன்று.

இளையராஜா  தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா. இளம் வயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ந்தவராக இருந்தார் ராசய்யா.

1961ல் இருந்து 1968ம் ஆண்டு வரை இவரது சகோதரர்களுடன் இணைந்து இந்தியாவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான கச்சேரிகளிலும், நாடகங்களிலும் தனது பங்கை அளித்தார்.

1969ம் ஆண்டு சென்னைக்கு வந்த இளையராஜா தனது 26வது வயதில் மேற்கத்திய பாணியில், பியானோ மற்றும் கிதார் கற்று தேர்ந்தார்.
பின்னர், 1976ம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது தனது பெயரை இளையராஜா என மாற்றிக்கொண்டார்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகளைப் பெற்றவர் இவர்.
இவரது சாதனைள் கொஞ்சநஞ்சமல்ல.  பட்டங்களும், விருதுகளும்  நிறைய பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இளையராஜா. கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் திரையிசைத்துறையில் சாதனை படைத்திருக்கிறார்.

1976ம் ஆண்டு தொடங்கி தற்போது தாரை தப்பட்டை, ஓய், அம்மா கணக்கு, அப்பா, ஒரு மெல்லிய கோடு, கிடா பூசாரி மகுடி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

என்றும் இனிமை இளையராஜா!