கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் சண்முக இந்து கல்லூரியில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய ஆசிரியைகள் சேலை உடுத்தாமல் ஜிஜாப் புர்க்கா அணிவதை எதிர்த்து போராட்டங்களும் அதற்கெதிராக முஸ்லிம்களின் போராட்டங்களும் தொடர்கின்றன.

இது சமூகவலைத்தளங்களில் மிக உக்கிரமான துவேஷ கருத்துக்களை இரு சமூகத்தாரும் மாறி மாறி தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. இச்செயற்பாடானது இன முறுகலை தோற்றுவித்து வன்முறையில் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

முஸ்லிம் குழுக்கள் தனி நபர்கள் சேலை ஆபாச உடை அபயா ஜிஜாப் அடக்கமான உடை என்றும் , தமிழர் சேலை தமிழரின் பாரம்பரிய உடை என்றும் கோஷம் எழுப்புகின்றனர்.

அனால் உண்மையான காரணம் இதுவல்ல என்பது பகுத்தறிவை பாவிக்கும், சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் வன்முறை கலவரத்தை விரும்பாதவர்களுக்கும் மற்றும் இலங்கையின் வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும் தெரியும். கிழக்கு மாகாணம் கூடுதலான தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேம் மாத்திரம் அல்ல, இரு சமூகத்தினரும் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு சமூகங்களும் முகம் கொடுக்கும் பொருளாதார சமூக கலாசார மொழி பிரச்சனைகள் ஒன்றாகவே காணப்படுகின்றது. கூடவே இவ்விரு சமூகங்களும் பேசும் மொழி தமிழாகவே உள்ளது. அதுமட்டுமல்ல ஒரு அரசாங்கத்தை, அமைக்கும் அல்லது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பலம் மலையக மக்கள் உட்பட இம்மக்களிடமே உள்ளது.

ஆகவே இவ்விரு சமூகங்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளை தோற்றுவித்தல் பேரினவாத அரசியல் குளிர்காய எதுவாய் அமைகிறது என்பது தெளிவு. இதேதான் கடந்தகாலங்களிலும் இந்த பேரினவாத அரசு செய்தது வந்திருகின்றது.

இனியும் செய்யும். அனால் தெற்காசியாவில் மத அடிப்படைவாதம் வீறு கொண்டு எழுவது போல் இலங்கையில் பௌத்தமும் இந்து மத அடிப்படைவாதமும் வீறுகொண்டு எழுவதை காண முடிகிறது.

இவ்விருமதங்களும் அண்டைய நாடான இந்தியாவை திருப்திபடுத்தவும், இந்தியாவின் அனுசரணையையும் நன்மைதிப்பையும் இலங்கை அரசுக்கு எப்போதும் பெற்று கொள்ள உறுதுணையான காரணிகள் என்பதை மக்கள் உணர வேண்டும். இதே போல் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக உருவகப்படுத்தும் நடைமுறையும் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றதென்பதும் கண்கூடு.

சேலை என்பது தமிழர்களின் பாரம்பரிய உடை இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நேபாளர்கள் பங்களாதேஷ பெண்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பெண்கள், வடக்கு இந்திய பெண்கள் , மலையாளிகள் ஏன் சிங்களவர்களும் சேலை அணிகின்றனர். இதே போல் எண்பதுகளில் இருந்து இலங்கையில் உள்ள பெண்கள் இந்த சல்வார் கமிஸ் அல்லது சுடிதார் காலாச்சரதுக்குள்ளும் இப்போது லேகங்கா காலச்சராதுக்குள்ளும்
முழ்கி போவதை காணமுடிகிறது.

இதே போல் முஸ்லிம் பெண்களும் சேலை உடுத்து சேலை தலைப்பால் முக்காடு இட்டவர்கள்தான். அண்ணளவாக 90 களிலிருந்து தான் அதுவும் மத்திய கிழக்குக்கு வேலைவாய்ப்பை தேடி போகத்தொடங்கிய பின்னேதான் இந்த அபயா கிஜாப் புர்க்கா கலாச்சாரம் தோன்றத்தொடங்கியது. இது எதை காட்டுகின்றது என்றால் ஆடை கலாச்சாரம்காலத்துக்கு காலம் மாறக்கூடியது.

இந்த ஆடை கலாச்சாரம் என்பது பெண்களில் திணிக்கபட்டுள்ள அளவுக்கு முஸ்லிம்
ஆண்களிலோ அல்லது தமிழ் ஆண்களிலோ திணிக்கப்படவில்லை. தமிழ் ஆண்கள் இந்து பாடசாலைக்கு வெட்டி சால்வை உடுத்து செல்வதில்லை என்பதை கருத்தில் கொள்ளல் அவசியம். அகவே இந்த பெண்களின் ஆடை விவகாரத்தை பாவித்து இரு இணக்களுக்கும் இடையே குரோதத்தை பிளவை உண்டு பண்ணும் வேலையே நிறுத்த வேண்டும்.

இதனூடு பேரினவாத அரசியலுக்கு நீங்கள் தீனி போடுவது மட்டுமல்ல இரு இனக்களுக்கும் உரிய பொதுவான பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன.
ஆகவே பெண்கள் எதை உடுத்தவேண்டும் என்றோ, உடுத்தக்கூடாது என்றோ சொல்லும் அதிகாரம் எவருக்கும் இல்லை. பெண்கள் தனக்கு பிடித்த சௌகரியமான உடையை உடுத்தட்டும்.

குறிப்பு: முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளை புர்க்கா ஜிஜாப் அபாயா அணியச்சொல்லியோ அல்லது சேலை அணிய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.