டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  71ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து பரவிய  உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளிலும் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.    இது  கொரோனா பரவலின் 2வது அலை என்றும், முந்தைய தொற்று பரவலைவிட 70 சதவிகிதம் அதிகமான வேகத்தில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, யுகே, ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவில் புதிய வகையிலான உருமாறிய  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  71 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில்  இந்தியா திரும்பியவர்களை கண்டுபிடித்து ,அவர்களுக்கு  கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தொற்று அறிகுறி உள்ளவர்களின்   ரத்த மாதிரிகள் பெங்களூரு மற்றும் புனேவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 58 ஆக இருந்த நிலையில்,  இன்று மேலும் 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதன் காரணமாக மொத்தம் 71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து,  சர்வதேச விமானங்களில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு புதியவகை கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் மாதிரிகள், 10 அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படுகிறது.