டில்லி,

த்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி.  கனிமொழி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முத்தலாக் விவாகரத்துக்கு தடை விதிக்கும் வகையில், உச்சநீதி மன்ற அறிவுரைப்படி மத்திய அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ், அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும்,  மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

இந்நிலையில், முத்தலாக் தடை மசோதா குறித்து, திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி கூறியதாவது:

“மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனை நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்பட வேண்டும்.

இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்”.

இவ்வாறு அவர்.

ஏற்கனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவும், முத்தலாக் சட்ட மசோதாவை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு முதலில் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.