இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக 800 படத்தின் தயாரிப்பு நிறுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.
இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைஃப பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர்.
அதன்மூலம் இலங்கைத் தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக் காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டு தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது.
எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.