வைகோ

தான் ரசித்துப் பார்த்த திரைப்படங்கள் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். வீட்டுக்குத் தெரியாமல் காம்பவுண்டுக் கேட்டைத் தாண்டிக் குதித்து, இரவுக் காட்சி பார்த்தது குறித்தும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மாணவப் பருவத்தில் இருந்தே திரைப்படங்களைப் பார்ப்பது, என் மனதிற்கு மகிழ்வூட்டுகின்ற செயல் ஆகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். எட்டு வயதில், எங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள திருவேங்கடம் டூரிங் கொட்டகையில் நான் பார்த்த, ஜெமினியின் ‘சந்திரலேகா”,  எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகியவை என் நெஞ்சை விட்டு நீங்காத திரைப்படங்கள் ஆகும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, வீட்டுக்குத் தெரியாமல் காம்பவுண்டுக் கேட்டைத் தாண்டிக் குதித்து, சைக்கிளில் சென்று இரண்டாம் ஆட்டத்தில்  பார்த்த ‘மனோகரா’, ‘தாய்க்குப் பின் தாரம்’  திரைப்படங்களும் என் மனதைக் கொள்ளை கொண்டவை ஆகும்.

பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது, ‘நாடோடி மன்னன்’, ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’, ‘சிவகங்கைச் சீமை’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கல்யாணப் பரிசு’ ஆகியவை என் உணர்வுகளைக் கூர்படுத்திய காவியங்கள் ஆகும்.

பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த, ‘படிக்காத மேதை’,  ‘அரசிளங்குமரி’, 61 இல் ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, 62 இல் ‘மன்னாதி மன்னன்’, 63 இல் ‘ஆலய மணி’, 64 இல் ‘கர்ணன்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘பணம் பந்தியிலே’ ஆகியவை என் இதயச் சுவரில் பதிந்த திரைக்காவியங்கள் ஆகும்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாகப்பிரிவினை’, ‘ஆலயமணி’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘அவளுக்கு என்று ஓர் மனம்’, ‘சுமைதாங்கி’, ‘தீபம்’, ‘ஞான ஒளி’, ‘அவன்தான் மனிதன்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘வசந்த மாளிகை’ இப்படி எத்தனையோ காவியங்கள் என் நெஞ்சில் நிறைந்தவை.

டென் கமாண்மெண்ட்ஸ்

சிசில் பி டிமெல்லியின் ‘பத்துக் கட்டளைகள்’ (Ten Commandmentds), அதன் கதாநாயகனான சார்ல்டன் ஹெஸ்டனின் ‘பென்ஹர்’ (Ben Hur) ஆண்டனி குயின் நடித்த ‘உமர் முக்தார்’, யூல் பிரன்னர் நடித்த ‘Taras Bulba, Kings of the Sun’ ஆகிய படங்களை இதுவரை நூற்றுக்கணக்கான தடவை பார்த்து இருக்கின்றேன். தமிழ்ப்படங்களில் நான் திரும்பத் திரும்பப் பார்ப்பது ‘பாசமலர்’, ‘நாடோடி மன்னன்’ ஆகும்.

1964 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்க வந்தபோது, சாந்தி தியேட்டரில் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘ட்ரோஜன் வார்’ (Trojan War). ஆனந்த் திரையரங்கில் பார்த்த படம் ‘ELCID’;  சபையர் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் ‘கிளியோபாட்ரா’, ‘சவுண்ட் ஆப் மியூசிக்’, ‘Battle of the Bulge; Lawrence of Arabia’ கேசினோ திரையரங்களில் பார்த்து ரசித்த படங்கள் ‘From Russia with Love, Goldfinger’; அறிஞர் அண்ணா விரும்பிப் பார்க்கும் ‘மினர்வா’ திரையரங்கில் என்னை ஈர்த்த திரைப்படம் ‘பெக்கெட்’; பயமுறுத்திய படம் ‘சைக்கோ’ (Psycho); விறுவிறுப்பூட்டிய படம் ‘The day of the Jackal’; மறக்க முடியாத படங்கள் ‘Guns of Navarone’, ‘Where Eagles Dare, Titanic’; நான் இன்றைக்கும் திரும்பத் திரும்பப் பார்க்கும் படங்கள் மெல்கிப்சனின் ‘Brave Heart’, ‘Passion of the Christ’.

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’, ‘சாரதா’, ‘கை கொடுத்த தெய்வம்’, தோல்விப் படம் என்று சொல்லப்பட்டாலும் என் நெஞ்சை அள்ளிய ‘என்னதான் முடிவு?’; மல்லியம் ராஜகோபாலின் ‘சவாலே சமாளி’;

 

 

மிசா கொட்டடியில் இருந்து வெளியே வந்தபின், கிராமிய மணத்தை இதயத்தில் பரப்பிய பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, காதல் காவியமாம் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘புதுமைப்பெண்’, ‘கடலோரக் கவிதைகள்’, சிவாஜியை இமயமாய் நிமிர்த்திய ‘முதல் மரியாதை’, பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நீர்க்குமிழி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘வானமே எல்லை’, ‘சிந்து பைரவி’.

பாட்சா

ரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘அண்ணாமலை’, ‘தளபதி’, ‘முத்து’, ‘பாட்சா’, கமல்ஹாசனின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சலங்கை ஒலி’, ‘நினைவை விட்டு அகலாத நாயகன்’, ‘தேவர் மகன்’, பாலு மகேந்திராவின் ‘முள்ளும் மலரும்’, ‘மூன்றாம் பிறை’, ‘மூடுபனி’, ‘தங்கர் பச்சானின் அழகி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, வசந்த பாலனின் ‘வெயில்’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ‘விசாரணை’, ராஜ்கிரணின் ‘அரண்மனைக் கிளி’, மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், இயக்குநர் புகழேந்தி தங்கராஜின் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மணிவண்ணனின் ‘அமைதிப்படை’, சேரனின் ‘பாண்டவர் பூமி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராப்’, பாலாவின் ‘சேது’, அமீரின் ‘பருத்தி வீரன்’ ஜனநாதனின் ‘பேராண்மை’, ஜெயம் ராஜாவின் ‘தனி ஒருவன்’, ராஜமௌலியின் ‘நான் ஈ’.

அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற படங்களில் என் மனதில் பதிந்தது ‘The Revenent’; தோல்வியில் கலங்காதே என்று எனக்கு ஊக்கம் அளித்த படம் ‘Pursuit of Happines’;

என் இதயச் சுவற்றில் கல்வெட்டாய் அண்மையில் பதிந்த படங்கள், மணிகண்டனின் ‘காக்கா முட்டை’, சுசீந்தரனின் ‘அழகர்சாமியின் குதிரை’ பாண்டியராஜனின் ‘பசங்க’, சகோதரர் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ ஆகும்.

இப்படி எத்தனை எத்தனையோ படங்கள் உள்ளன. நினைவில் வந்ததை எழுதியுள்ளேன்.

–        இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமியின் “தென்மேற்கு பருவக்காற்று”, நீர்பறவை, தர்மதுரை பற்றி விரிவாக பாராட்டி எழுதியுள்ளார். அது தனிச்செய்தியாக  வெளியிடப்பட்டுள்ளது.