க்னோ

கோரக்பூர் மருத்துவமனை மருத்துவர் கபீல் கான் தனது எதிர்காலம் உ.பி. முதல்வர் யோகியின் கைகளில் உள்ளதாக வருத்தத்துடன் கூறி உள்ளார்.

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தன.    உத்திரப் பிரதேச அரசு அந்த மரணங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல எனவும் தலைமை மருத்துவர் கபீல் கானின் கவனக்குறைவே காரணம் எனவும் கூறியது.  அதை ஒட்டி கபீல் கான் கைது செய்யப்பட்டார்.  சுமார் எட்டு மாதங்கள் கழித்து தற்போது அலகாபாத் உயர்ந்நிதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

சிறையில் இருந்து வெளியே வந்த கபீல்கான் தனது மகளையும் மனைவியையும் கண்ணிருடன் கட்டித் தழுவினார்.   அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் அப்போது பேசினார்.  கபீல் கான், ”நான் மனதளவில் சோர்ந்து போய் விட்டேன், உணர்ச்சிகள் மரத்துப் போய் விட்டன,  உடல்நலமும் சீராக இல்லை.   ஆயினும் நான் தற்போது எனது குடும்பத்தை சந்தித்ததில் சிறிது நிம்மதி அடைந்துள்ளேன்.

நான் சிறையில் இருந்த போது குற்றம் ஏதும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டதற்கு மிகவும் வருந்தினேன்.   நான் ஏற்கனவே ஒரு கடிதம் ஒன்று எழுதினேன்.  அதில் அரசு நிதி உதவி அளிக்காததால் ஆக்சிஜன் விநியோகஸ்தர்க்கு பணம் தரவில்லை என்றும் அதனால் அவரால் ஆக்சிஜன் விநியோகிக்க முடியாமல்  போனது என தெரிவித்துள்ளேன்.

அன்று நான் எனது சொந்த முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தேன்.   நான் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக,  மருத்துவராக, தந்தையாக நான் எனது கடமையை செய்தேன்.    ஆனால் அரசு என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளது.   எனது எதிர்காலம் தற்போது முதல்வர் யோகியின் கைகளில் உள்ளது.   எனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தால் நான் மீண்டும் எனது மருத்துவமனைப் பணியை தொடர முடியும்” என தெரிவித்துள்ளார்.