download (4)
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சியில் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  அதில் இருந்து சில கேள்வி பதில்கள்..
தேர்தல் அறிக்கையில் நீங்கள் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்று மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
தி.மு.க.வை பொறுத்த வரையில் எப்போதும், “சொன்னதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்”. பெண்களுடைய பாதுகாப்பிற்காக, தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக,  திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமுல்படுத்துவோம் என்று தெளிவாக குறிப்பிட்டு காட்டி இருக்கின்றோம். அதன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.
2006–ம் ஆண்டு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தபோதும் இதே போல பிரச்சினை வந்தது. தலைவர் கலைஞர் அந்த இழப்பை சமாளித்தார்கள். அதேபோலத்தான் இப்போதும் கனிம வளம், தாது மணல், கிரானைட் போன்றவற்றில் இருந்து வரக்கூடிய வருமானங்களை தனியாருக்குத் தராமல், அரசே ஏற்று,  புதிய வருமானத்துக்கு வழி செய்யும்.
ஜெயலலிதா தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தி.மு.க.வை குடும்ப கட்சி என்றும் உங்கள் ஆட்சியை குடும்ப ஆட்சி என்றும் சொல்லி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கின் றீர்கள்?
அதாவது சசிகலாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை மூடி மறைப்பதற்காக திட்ட மிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு உத்தியை அவர் கையாண்டு இருக்கிறார். அது தவிர வேறொன்றும் அல்ல.
என்னைப் பொறுத்தவரையில் நான் 45 ஆண்டுகளாக அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறேன். அதுவும் தி.மு.க.வில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி நகரக் கழகம், பகுதி கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என்று படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். ஆகவே என்னை வைத்து அவர் இப்படி சொல்வதை தமிழ் நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 

 உதயநிதி, சபரீசன்
உதயநிதி, சபரீசன்

 
உங்கள் குடும்பத்தில் இருந்து இன்னும் யாராவது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?
என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 பொதுவாக உங்கள் கட்சி மீதும் சரி, அ.தி.மு.க. மீதும் சரி ஊழல் புகார்கள் அதிகம் உள்ளன. இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல சொத்துக்குவிப்பு வழக்குகள் போடப்பட்டு உள்ளதே தவிர, எதுவுமே நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டு தண்டனை கள் வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி தான் செய்யப்பட்டது.
ஆனால் ஜெயலலிதாவை பொறுத்தவரையில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது டான்சி வழக்கில் என்ன தண்டனை பெற்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பிறகு சமீபத்தில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது. இப்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டில் உள்ளது.
ஆக, தி.மு.க. மீது போடப் பட்ட வழக்குகள் எதுவுமே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட வில்லை. அப்படியொரு தீர்ப்பும் வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இதில் சேர்த்து பேசுவதில் எந்தவித நியாயமும் கிடையாது என்பதுதான் என்னுடைய கருத்து.
நமக்கு நாமே பயணத்தில் சில இடங்களில் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்கள். அது எதற்காக?
நமக்கு நாமே பயணத்தின் போது எல்லாத்தரப்பு மக்களையும் நான் சந்தித்தேன். அதில் குறிப்பாக தொழில் அதிபர்கள், சிறுகுறு தொழில்களை நடத்தக்கூடிய நண்பர்கள் என பலதரப்பினரை சந்தித்தபோது, அவர்களுக்கு ஏற்பட்ட சில சங்கடங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அதில் சில பிரச்சினைகளில் மத்திய அரசின் அனுமதிகளை பெற வேண்டிய சூழ்நிலை, பொருளாதார ரீதியான சில பிரச்சினைகள் இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை வரும் காலத்தில் முறைப்படுத்தி செயல்படுத்துவோம்.
அப்படிப்பட்ட சிலவற்றில் எங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் கூட நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நான் எங்களுடைய சார்பில் பகிங்கரமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்று நான் வெளிப்படையாக சொன்னேன். இனி அதுபோன்றதொரு சூழ்நிலை வராது. வரக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்ற நிலை இல்லாத ஆட்சியாகத்தான் இருக்கும் என்ற உறுதியை நான் அவர்களிடத்தில் சொல்லி இருக்கின்றேன்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 30 வருடங்களாகவே தி.மு.க மற்றும் அதிமுக வுக்கு இடையேதான் போட்டி இருக்கிறது. இருந்த போதிலும் மூன்றாவது அணி, நான்காவது அணி உருவாவது பற்றி உங்களுடைய கருத்து?
இந்த தேர்தலைப் பொறுத்த வரையில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதுதான் முக்கியம்.அதிலும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. இருகக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம். அந்த நிலை உருவாவதற்கு தி.மு.க வைத் தவிர வேறெந்த கட்சியையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. மற்ற கட்சிகள் ஓட்டுக்களை பிரிப்பதற்காக நிற்கலாம். முதல்–அமைச்சர் வேட்பாளர் என்றும் சொல்லிக் கொள்ளலாம். எனவே தி.மு.க. தான் அ.தி.மு.க.வை மாற்றுகிற சக்தியாக இருக்கும்.
 ஏன் தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும், ஏன் அதிமுக.விற்கு வாக்களிக்க கூடாது?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முழுவதும் படிச்சிருக்கீங்களா? அதைப் படிச்சீங்கனா தி.மு.க.விற்கு தான் ஓட்டு போடுவீங்க. ஏனெனில் இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைபடித்தால் நிச்சயம் உங்களுடைய ஓட்டு தி.மு.க.வுக்குதான்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.