கோவை: கோவையில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா என்று விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடையை நடத்தி வந்தவர் ஸ்ரீராம். மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனோவை குணப்படுத்தலாம் என்று துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் விளம்பரம் செய்து வந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சித்த மருத்துவத் துறையினர் அந்த கடைக்கு சென்றனர். பின்னர் மூலிகை மைசூர்பாவை சோதனை செய்தனர்.
அப்போது முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகை பொருட்களை பயன்படுத்தி மைசூர்பா தயாரித்தது தெரிய வந்தது. சொந்த விளம்பரத்திற்காகவும் போலியாக தகவல்களை வெளியிட்டதும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 கிலோ மைசூர்பா மற்றும் மூலிகைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்கும் சீல் வைத்து அதன் உரிமத்தையும் ரத்து செய்தனர்.