78
“என் உச்சி மண்டையில சுர்ருங்குது..” பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடல் உட்பட பலவற்றை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலையின் நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இசையமைப்பாளர்கள் தினா, விஜய் ஆண்டனி உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை   “தமிழ்த் திரைப்பாக்கூடம்” என்ற அமைப்பு நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தினா திரையுலகில் நிலவும் குடிப்பழக்கம் பற்றி குமுறித்தள்ளிவிட்டார்:

நிகழ்ச்சியில் தினா
நிகழ்ச்சியில் தினா

‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’  நேற்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், “ “ஒரு மனிதனாக மிகவும் கஷ்டப்பட்டு இந்தச் சமுதாயத்தில் போராடி, தன் வரிகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் சென்று சேரும் அளவுக்கு  பாடலாசிரியர் அண்ணாமலை உழைத்து முன்னேறினார். ஆனால் இன்னும் எவ்வளவோ சாதிக்க இருக்கும் போது ‘ பால் பொங்கி வரும் போது பானை உடைவதைப் போல ‘ வளரும் போதே அவர்  மறைந்து விட்டார்
அவர் மரணம் என்னை மிகவும் பாதித்தது.
‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ என்று  பாட்டு எழுதினார் .அவரிடம் அது பற்றி கேட்டேன், அது என்னய்யா ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ என்று?  ‘அதாவது பச்சை மிளகாய் கடித்து விட்டால் மண்டையில் சுர்ருன்னு வருமில்லையா அது போலத்தான் அண்ணே ‘என்பார்.
இசையமைக்கப் படிப்பு பெரிதாக வேண்டாம். ஆனால் பாட்டு எழுத படித்திருக்க வேண்டும்.தமிழைப் படித்தவர்களால் மட்டுமே பாடல் எழுத முடியும்.
இவ்வளவு படித்து விட்டு எழுதுகிறவர்களின் இழப்பு கொடுமையானது. அதுவும் இளம் வயதில் இப்படி மறைவது மிகவும் கொடுமையானது. முத்துக்குமார் மரணம் நம்மை உலுக்கியது. அதிலிருந்து மீள்வதற்குள் அண்ணாமலை மறைவு . இதைக் கேள்விப்பட்ட போது முதலில் நான் இதை நம்பவே இல்லை. நல்லாத்தானே இருந்தார் என்றுகேட்டேன். அவ்வளவு அன்பாகப்பழகுபவர்.இன்னொரு பிறவி இருந்தால் அண்ணாமலை எனக்குத் தம்பியாகப் பிறக்க வேண்டும்.திறமைசாலிகள் ஏன் இப்படி மறைகிறார்கள்? என்று கேட்டால் , வருத்தமாக உள்ளது.
நா. முத்துக்குமார் - அண்ணாமலை
நா. முத்துக்குமார் – அண்ணாமலை

பொதுவாகவே சினிமாவில்  பகல் 9 மணி முதல் இரவு  9 மணிவரை படப்பிடிப்பு முடித்து விட்டு வருவார்கள். நாளைக்குப் பாடல் காட்சிகள் எடுக்கவேண்டும்  இன்றிரவே பாடல் கொடுங்கள் என்பார்கள். அப்படி அவர்கள் வரும் போது பகல் எல்லாம் வேலை பார்த்த களைப்பு என்று  பாட்டிலைத் திறப்பார்கள் நமக்கும் கொடுப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்?  எப்படியோ இரவே வேலை வாங்கி விட்டு சென்று விடுவார்கள்.
இரவுத்தூக்கம் கெட்டு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி துன்பப்படும் போது எந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் வரமாட்டார்கள். உங்கள் உடம்பை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் முக்கியம் அதன் பிறகு தான் தொழில்.” என்று வளரும் கவிஞர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.
“நேர்மையாக பேசும் தினாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று பேசிக்கொண்டனர், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள்.