சென்னை:

சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, சீமான் அதிரடியாக  6 கேள்வி எழுப்பி உள்ளார். “எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்… எப்போதுதான் வாய் திறப்பீர்கள்” என்றும் வினவி உள்ளார்.

நேற்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, சில அரசியல் கட்சிகளால் மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பீதி கிளப்பப்பட்ட வருகிறது என்று கூறினார். பாஜகவுக்கு ஆதரவாக அவர் கூறியது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட அரசயில் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 6 கேள்விகளை அதிரடியாக எழுப்பி தெளிவுபடுத்தக் கோரியுள்ளார்…

அப்போது, சிஏஏ, என்சிஆர், என்பிஆர் போன்ற மத்தியஅரசு சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்களே,  இந்திய இஸ்லாமியர்களுக்கென்று ஒரு பிரச்சினையென்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே.. எப்போது குரல் கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.

1) முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் அஸ்ஸாமில் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா?

2) மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, தாத்ரியில் இக்லால் எனும் முதியவரை இந்துத்துவ வெறியர்கள் அடித்தே கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

3) ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப்பயங்கரவாதிகள் எரித்துக்கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

4) காஷ்மீரில் ஆசீபா எனும் குழந்தை கோயிலுக்குள் வைத்துக் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்குக் குரல் கொடுத்தீர்களா?

5) அமீர்கான் போன்ற உச்சபட்ச திரை நட்சத்திரங்களே இசுலாமியர் என்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது குரல் கொடுத்தீர்களா?

6)  எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்? எப்போதுதான் வாய்திறப்பீர்கள்? 

இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.