நாகலிங்கப் பூ – ஆன்மீக மலர்

மலர் என்றாலே அழகு. அழகு தருவது மலர்கள். பூஜைக்கு உகந்தது மலர்கள். கடவுளை விட மலர்கள் சிலசமயம் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் புல், பூண்டு, பூ, பழம் என அனைத்தும் கடவுளுக்குகாகத்தான் என்ற மனோபாவமே நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பூவே கடவுள் என்று நாம் உணரும்படி ஒன்றைப் படித்துவிட்டால் என்ன என்று சித்தம் கொண்டதாலோ என்னவோ அப்படி ஒரு மலரைப் படைத்தான் கடவுள். அதுதான் நாகலிங்கப்பூ. இது கடவுளுக்கானதல்ல இதுவே கடவுள். இந்தப் பூவை இறைவன் சூடிக்கொள்ளவில்லை. மாறாக இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.

நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்றுக் கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும்.

சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது . விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்குச் சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று ….தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.

“ஷல்பூல்” என்றும் “கைலாஷ்பதி” என்றும் வடநாட்டவரும் “நாகவல்லிப்பூ” ” மல்லிகார்ஜுனப்பூ” என்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள்.  நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போலப் பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.

நாகலிங்கப் பழம் மகா விசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசியக் கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.

கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்துத் தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.