சென்னை

‘காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், ‘‘தென்னிந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு’’ என்றார். ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நதிகளை இணைப்பை பயன்படுத்தி கரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது’’ என்றார்.

அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சருக்கு காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் கூறுகையில், ‘‘ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியிருப்பது புண்படுத்தும் பேச்சாகும்.

‘ஆச்சி’ என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல். அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.