ரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது.  இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.  இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம்  தருவதாக கருதப்படுகிறது.  இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.

இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.  இந்த  தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.

இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை “தீர்த்த துர்க்கை”  என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

இங்கு நாகராஜர்கோவில் ஏற்பட்டதற்கு பல கர்ண பரம்பரைக் கதைகள் கூறப்படுகின்றன. தமிழகத்துக்கோவில்களில் வேறேங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும்.

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் கனவில் நாகராஜர் தோன்றி, “ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம்” என்று கூறினார்.

அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடதோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இக்கோவிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, ”பாம்பே காட்டு இல்லம்” என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள். ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும் விசித்திரமாகும்.  வயல் இருந்த இடம் என்பதால்  எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.  இந்த நீருடன் சேர்ந்த மணலையே,  கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவோ காலமாக எடுத்தும் அம்மண் குறையாமல் இருப்பது நாகராஜனின் ஒப்பற்ற அருளைக் குறிக்கிறது என்று சொல்கிறார்கள்.

கூரைவேயப்பட்டிருக்கும் மூலஸ்தானத்திற்கும் பின்னால் தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும் `ஓடவள்ளி’ என்ற ஒரு பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதனடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள் குடியிருந்ததாகவும் வாய்மொழிக் கதைகள் தெரிவிக்கின்றன.

அக்காலத்தில் பிரசாதத்தை `ஓடவள்ளி’, இலையில் கொடுப்பார்களாம். ஒவ்வொரு `ஓடவள்ளி’ இலையும், ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். இப்பொழுது பிரசாதம், புற்று மண்ணும், சந்தனமும் வாழை இலையில் கொடுத்து வருகிறார்கள். அம்மன் கோவிலில் மட்டும் குங்குமம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் `தை’ மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றி, பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது.

என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர்.

அதுசமயம் பக்தர்கள் கூடி, உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி, நாகராஜனை தரிசித்து அருள் பெறுவதற்கு வழிபடுகின்றனர்.

நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

நடைதிறப்பு : காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை.

தினசரி 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

நாகதோஷம் உள்ளவர்கள் ஒருமுறை இக்கோவிலுக்கு சென்று, அங்குள்ள நாக சிலைகளுக்கு பாலூற்றி வணங்கினால், அவர்களின் தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதிகம்.