சென்னை:
தன்னை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, தான் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை விடுவிக்கவும் கோரி நளினி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு (2019) தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் (2020, பிப்ரவரி) 20ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நளினியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு, உத்தரவிட்டது.