சென்னை:

னக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெற்றதையடுத்து, இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவருக்கு ஒரு மாதம் மட்டுமே நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த  மாதம் 25ந்தேதி பரோலில் வெளியேறி, வேலூரில் வசித்து வருகிறார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்கி தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். சிறைத்துறை விதிகளின் படி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், தனது மகள் ஹரித்திராவின் திருமண ஏற்பாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினிமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.