சென்னை: கொள்கையில் சமரசமில்லை என்று கூறி, பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணிப்பதாக தோழர் நல்லகண்ணு அறிவித்து இருக்கிறார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே புதியதாக  சாணக்யா என்ற செய்தி வழங்கும் இணையதள நிறுவனத்தை தொடங்கினார். அந்த செய்தி நிறுவனம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசியல் தலைவர்களுக்கு சாணக்யா விருது வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். அந்த விருதை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

3 தலைவர்களுமே வெவ்வெறு கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள். அவர்கள் மூன்று பேருக்கும் விருது அளிப்பது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

சுதந்திர போராட்டக் காலத்தின்போதும், நாடு விடுதலை பெற்ற பிறகும் பல்வேறு போராட்டங்களையும், தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக அரசின் பாசிச போக்கை எதிர்த்தும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை எதிர்த்தும் 94 வயதான தோழர் நல்லகண்ணு போராடி வருகிறார்.

அவருக்கு வலதுசாரி கருத்தியல் உடைய ரங்கராஜ் பாண்டே விருது அளிக்க அறிவித்திருந்தது ஜனநாயக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாண்டே தொடர்ச்சியாக பாஜக திட்டங்களுக்கு ஆதரவாக, இந்துத்வா கருத்தியலை கொண்டு செயல்படுவதால் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தோழர் நல்லகண்ணு, ரங்கராஜ் பாண்டே வழங்கும் விருதை பெறமாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 80 ஆண்டுகளாக லட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி.

நண்பர் ரங்கராஜ் பாண்டே அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்துகொள்ளமாட்டார். கொள்கையில் சமரசம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தோழர் நல்லகண்ணுவின் இந்த முடிவை ஜனநாயக அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.