சென்ன‍ை: இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில், ‘மஹிந்திரா தார்’ என்ற சிறப்புவகை ஜீப் பரிசாக வழங்கப்பட்டதற்கு, அந்நிறுவன உரிமையாளர் ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடராஜன்.

மேலும், பிரதிபலனாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில், தனது கையொப்பமிட்டு, அதை ஆனந்த் மஹிந்திராவுக்கு அனுப்பியுள்ளார் நடராஜன்.

அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, “இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதென்பது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சிறப்புரிமை. எனது வளர்ச்சி கரடுமுரடான பாதையிலேயே நிகழ்ந்தது.

அதனுடன் இணைந்து, நான் பெற்ற ஆதரவும் அன்பும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டது. அருமையான மனிதர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு, எனக்கான சிறந்த வழியை கண்டடைய உதவியது.

எனக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா தார் வாகனத்தை, எனது இல்லத்திற்கு ஓட்டி வருகையில், அதை வழங்கிய திரு.ஆனந்த் மஹிந்திரா மீது அளவற்ற நன்றியுணர்வு ஏற்பட்டது. ஏனெனில், அவர் எனது பயணத்தை அங்கீகரித்து, தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அவருக்காக, பிரிஸ்பேன் டெஸ்ட்டில், நான் அணிந்து விளையாடிய ஜெர்சியை, கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறேன்” என்றுள்ளார் நடராஜன்.