ந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பியும் ,  ‘சாச்சா நேரு’ (நேரு மாமா)  என்று அன்போடு அழைக்கப்படுபவரான  பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் இன்று. அவருக்கு இன்று நாடு  அஞ்சலி செலுத்துகிறது.

அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் ஜவஹர்லால் நேரு 1889- ஆம் ஆண்டு,  நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, தன்னுடைய 13 ஆம் வயதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ‘பிரம்ம ஞான சபை’ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கல்வி மட்டுமின்றி, குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, பனிச்சறுக்கு விளையாட்டு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்திய சுதந்திர இயக்கத் தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள் மே 27, 1964 அன்று மரணமடைந்தார்.

இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில்  சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சுமார் இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.

1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.

1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார்.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929  லாகூர் நிகழ்ச்சி யைத் தலைமையேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. 1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது.

வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947  புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப் பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது

1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார்.

நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டு மல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.

‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.

இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.

நேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடமும், அதைத் தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. நேரு இந்திய வெளியுறவுக் கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்தியசீன உறவைப் பேணுவதிலும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலைநிறுத்துவதிலும் முயற்சிகளை மேற்கொண்டார்.

1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.

1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். உலகப்போர் சமயத்தில் பெரும்பாலான விலங்கு களை இழந்த யூனோ விலங்கியல் பூங்காவிற்கு ஜப்பான் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஒரு யானைக் குட்டியை பரிசாக அளித்தார்.

நேரு தன் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் அவரின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை ‘சாச்சா நேரு’ (மாமா நேரு) என்றே செல்லமாக அழைப்பர்

அப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி காலமானார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

இன்று அவரது நினைவுநாள்…