பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கேயார் மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“எஸ்பிபியின் மறைவைக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவருடைய மறைவு என்னைப் பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக எஸ்பிபி இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபியின் சாதனையைப் போற்றும் விதமாகச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபியின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும்கூட” என வெளியிட்டுள்ளார் .