டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்யப்படுவதாக  மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளும் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக  நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது  மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாடு முழுவதும்  ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்படுவதாகவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 வரை நீடிக்கப்படுவதாகவும், கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்  என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்தாலும் லண்டன் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை என்றும்  வலியுறுத்தப்பட்டு உள்ளது.