சென்னை :

கொரோனா வைரஸ், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி உள்ள இந்த சார்ஸ் கோவ்-2 வைரஸ், இருமலில் தொடங்கி கடுமையான சுவாச நோய் வரை ஏற்படுத்தக்கூடியது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகள், நோய்த்தொற்று மிகவும் கடுமையாகும் போது நிமோனியா, கடுமையான சுவாச மண்டல நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்பு கூட நேரிடும்.

 

கொரோனாவிற்கு என்று சரியான மருந்து எதுவும் இன்றுவரை மருத்துவ விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுபோல், இதுவரை இந்த வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய பரிசோதனை உபகரணங்களும் தரமானதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

 

இந்நிலையில், உலகெங்கும் பல்வேறு நாடுகளில், நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், பல நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனையிலும் இடமில்லாமல் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர், அவர்களுக்கு பல்வேறு இயற்கை மற்றும் மாற்று மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டுவருகிறது.

 

யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகளைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான சளி சவ்வு படலத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது என்று இந்தியாவில் கூறிவருகின்றனர்.

 

தமிழக அரசு தற்போது இயற்கை மருத்துவ முறையிலான பானங்களை பருக அறிவுறுத்தி ‘ஆரோக்யம்’ எனும் ‘சிறப்பு திட்டத்தை’ வெளியிட்டுள்ளது, அரசு வெளியிட்டுள்ள இந்த திட்டத்தில் கூறியுள்ள இயற்கை பானங்கள் ‘தயாரிப்பு முறை’ விவரம் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.