a
*முதலாம் நாள்:–* சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். நீதியை காக்கவும், தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவுமே இவள் கோப ரூபமாக காட்சியளிக்கிறாள்.
நைவேத்தியம்: சர்க்கரைப்பொங்கல்.
*இரண்டாம் நாள்:–* அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.
நைவேத்தியம்: தயிர்சாதம்.
*மூன்றாம் நாள்:–* இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
நைவேத்தியம்: வெண் பொங்கல்.
*நான்காம் நாள்:–* சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக தரிசிக்க வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீய சக்திகளை சம்ஹாரம் செய்பவள். இவளின் வாகனம் கருடன்.
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.
*ஐந்தாம் நாள்:–* அன்னையை, மகேஸ்வரி தேவியாக வழிபாடு செய்ய வேண்டும். மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழு பலனையும் பெறுவதற்கு அன்னையின் அருளை பெற வேண்டும்.
நைவேத்தியம்: புளியோதரை.
*ஆறாம் நாள்:–* இன்றைய தினம் சக்தியை, கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
நைவேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
*ஏழாம் நாள்:–* அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். செந்தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.
நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.
*எட்டாம் நாள்:–* இன்று அன்னையை, நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையை வழிபடுவது சிறப்பு தரும்.
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
*ஒன்பதாம் நாள்:–* இறுதிநாளான இன்று தேவியை, ப்ராஹ்மி (சரஸ்வதி) ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க, இந்த அன்னையின் அருள் நிச்சயம் தேவை.
நைவேத்தியம்: அக்கர வடிசல்.
*முடிவு*