கர்தார்பூர்
கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான நவ்ஜோத் சிங் கலந்துக் கொண்டுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் இறங்கினார். தற்போது அவர் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிதசரஸ் கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்த அவர் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பாஜ்வாவை கட்டித் தழுவிய சர்ச்சையில் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பலரும் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் கர்தார்பூர் பாதை தொடக்க விழா நிகழ்வில் அவர் பாகிஸ்தான் சென்று கலந்துக் கொண்டது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த முதல் யாத்திரிகர்களை அவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இணைந்து வரவேற்றுள்ளனர்.
ராயல் புளூ நிறத்தில் சூட் மற்றும் மஞ்சள் தலைப்பாகையுடன் இருந்த சித்துக்குப் பாகிஸ்தான் மக்கள் வாழ்த்துக்கள் கோஷம் எழுப்பினர். அப்போது சித்து, “நான் எனது நண்பனை நேரில் வாழ்த்த வந்துள்ளேன். அவர் எனது குருநாதர் இல்லத்தை ஒரு சில மாதங்களில் சொர்க்கமாக மாற்றி உள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மக்கள் இந்த பிரிவினையால் மனதளவில் வலியை அனுபவித்தனர். அதற்கு மோடியும் இம்ரான்கானும் மருந்து தடவி விட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் முன்னாபாய் எம் பி பி எஸ் (தமிழில் வசூல்ராஜா எம் பி பி எஸ்) பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்”எனத் தெரிவித்தார்.
அவருடன் பாகிஸ்தானிய இளைஞர்களில் பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அவரைச் சுற்றி பெரும் கூட்டம் இருந்தது. இது குறித்து பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் ஷா முகமது குரோஷி, கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் போல சித்து இப்போது கதார்பூர் நாயகன் ஆகி உள்ளார் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.