ராமேஸ்வரம்,

மீனவர்கள்மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, வரும் 16ந்தேதி ராமேஸ் வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது கடலோர காவல்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில மீன் பிடித்துக்கொண்டிருந்த  ராமேஸ்வரம்   மீனவர்கள் மீது , இந்திய கடற்படை கடலோர காவல்படையினர்  ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர்கள்  பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் என்ற இரண்டு மீனவர்கள் காய மடைந்தனர்.

அவர் இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பிச்சை என்ற மீனவர் கொடுத்துள்ள புகாரை தொடர்ந்து,  மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடலோர காவல்படையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோர காவல்படை வீரரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும் மீனவர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர்தான் இதுபோன்ற அத்துமீறல் செயல்களில் நெடுங்காலமாக  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  தற்போது, இந்திய கடற்படையினரே இதுபோன்று இந்தியில் பேசு என்று கூறியும், ரப்பர் குண்டுகளால் தாக்கியும் உள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.