பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், கே என்கிற அழகு சாதனப் பொருட்களை கடந்த வருடம் அறிமுகம் செய்தார். இது அவரின் சொந்த நிறுவனம் .
இந்த நிறுவனத்துக்கான விளம்பரத்தில் தன்னோடு சேர்த்து சாய்னா நேவால், ஸோயா அக்தர், நயன்தாரா உள்ளிட்டோரை நடிக்க வைத்தார் .
இதற்கு நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்து கத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது நயன்தாரா பற்றி அவர் ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
“பெண்கள் என்றாலே அழகுதான். நாம் எப்படியிருக்கிறோமோ அதில் இருக்கும் அழகைப் பார்க்கத்தான் அப்படி ஒரு விளம்பரத்தை எடுத்தோம். அதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான பிரபலமான பெண்களை அழைத்து நடிக்கவைத்தோம்.

அந்த விளம்பரத்துக்காக நயன்தாரா வந்தார். எனக்கு அவர் வியப்பூட்டுபவராகத் தெரிந்தார். அவர் மிகவும் வலிமையானவர் என்று புரிந்துகொண்டேன். ஒரு போராளியாகத் தெரிகிறார். மிகவும் இளம் வயதிலிருந்தே அவர் இந்தத் துறையில் இருக்கிறார். பரிபூரணமாகக், கடுமையாக உழைப்பவர். எனக்கு அவரது அந்த குணங்களோடு ஒத்துப்போவது போல இருந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது எனது குழுவிடம், என்னைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல இருக்கிறது என்று சொன்னேன்” என கத்ரீனா கூறியுள்ளார்.