ஃபிளாரிடா: அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து கழகத்தின் வாரிய இயக்குநர்கள், கூடைப்பந்து போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன்மூலம், கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த என்பிஏ போட்டிகள், ஃபிளாரிடாவில் துவங்குவதற்கு வழியேற்பட்டுள்ளது.

மொத்தம் 22 அணிகளை மேற்பார்வை செய்யும் வாரியத்தின் முன் வைக்கப்பட்ட முன்மொழிவு, எந்த சிக்கலுமின்றி நிறைவேறியது. இதன்படி, வரும் ஜூலை 31ம் தேதி என்பிஏ விளையாட்டுத் தொடர் மீண்டும் துவங்குவதற்கு வழியேற்பட்டுள்ளது.

ஆர்லேண்டோவிலுள்ள விளையாட்டு வளாகத்தில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் தொடங்கும் விளையாட்டுத் தொடரில் 22 அணிகள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக மொத்தம் 29 அணிகள் வாக்களித்தன. ஆனால், போர்ட்லேண்ட் என்ற ஒரு அணி மட்டும் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தது. பிளே ஆஃப் போட்டிகள் ஆகஸ்ட்டில் நடைபெறும் மற்றும் இறுதிப் போட்டிகள் அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.