டெல்லி:

திமுக எம்.பி.க்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுப்ரியா சூலே இணைந்து எடுத்த போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற அவைகளை பல எம்.பி.க்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச்சென்று பார்வையாளர் மாடத்தில் அமரவைத்து, அவை நடவடிக்கைகளை கவனிக்கச் செய்வது வழக்கம்.

அதுபோல, தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக வேலூர் லோக்சபா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன்,  கதிர்ஆனந்த் தனது தந்தை துரைமுருகன், தாயார், மனைவி குழந்தைகளுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் சென்று பார்வையாளர் மாடத்தில் அமர வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமுக எம்.பி.க்களான கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன்,  தமிழச்சி தங்கபாண்டி ஆகியோர் நேரில் சென்று  அவர்களிடம் நலம் விசாரித்தனர். இதையறித் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சூலேவும் பார்வையாளர் மாடத்துக்கு சென்று, கதிர்ஆனந்த் குடும்பத்தினருடன் அளவளாவினார்..

அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சுப்ரியா சூலே தனது டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் திமுகவினரிடையே வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில பதவி ஏற்புவிழாவுக்கு மும்பை  சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சுப்ரியா சூலே நேரில் சென்று அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.