மும்பை:

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள  அரசியல் மாற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு பைத்தியக்காரத்தனம் என்றும், தனது மகனை முதல்வராக வேண்டும் என்று உத்தர் தாக்கரே மேற்கொண்ட அதீத ஆசையால் இன்று சிவசேனா தனிமைப்படுத்தப்பட்டு, கண்ணீர் வடிப்பதாகவும்  விமர்சிக்கப்பட்டு வருகிறது.

காராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து, மாநில முதல்வராக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகவும், அஜித் பவார் துணைமுதல்வராகவும் பதவி ஏற்று கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவுடனான ஆதரவை தனது  ஆதரவை சிவசேனா முறித்துக்கொண்ட நிலையில், ஆட்சி அமைக்க பகீரத பிரயத்தனம் செய்து வந்தது. கடைசி வரை சிவசேனாவுக்கு ஆதரவு தருவதாக கூறிய வந்த  தேசியவாத காங்கிரஸ் கட்சி, கட்சி நேரத்தில் சிவசேனாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டது.

எதிர்பாராத இந்த அரசியல் நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவின் ராஜதந்திரம்  மற்றும் சிவசேனாவின் அதிகார போதை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுதியற்ற நிலை குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, இது தேசிவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்று கட்சித் தலைவர் சரத்பவார் விளக்கம் அளித்துள்ள நிலையில், அவரது செயல் பாடுகள், சிவசேனாவின் மிரட்டலான போக்கு, தற்போது, தனித்து விடப்பட்டுள்ள  அவர்களின் நிலை குறித்தும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சரத்பவார் கூறுவது என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து  ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும், இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும்,. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் சரத்பவார் அறிவித்து உள்ளார்.

சிவசேனா கதறல்

அதேவேளையில், மகாராஷ்டிராவின் சாணக்கியராக கூறப்பட்டு வந்த சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரான சஞ்சய் ரவூத், ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரின் சத்தியப்பிரமாணத்தை “திருட்டு” என்று விமர்சித்து உள்ளார்.  பாஜக, தேசியவாத கூட்டணி அரசு அமைத்துள்ளது  மகாராஷ்டிரா மக்களுக்கு அவமானம் என்று கூறினார்.

உலகம் யாரைப் பார்த்து சிரிக்கிறதோ அவர்கள் வரலாற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றும் டிவிட் போட்டுள்ளார்.

மோடி வாழ்த்து

பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் முறையே பதவியேற்ற  தேவ்_பட்னாவிஸ் ஜி மற்றும் அஜித் பவர்ஸ்பீக்ஸ் ஜி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘தி காட்பாதர்’ திரைப்படத்தின் பொருத்தமான வரியை டிவீட் செய்துள்ளார்.

Keep your friends close, but your enemies closer (நண்பர்களை அருகில் வைத்துக்கொள், ஆனால், எதிரிகளையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்) 

அமித்ஷா – வெற்றிச்சிரிப்பு

மேலும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மாநிலத்தில் பாஜக ஆட்சி பதவி ஏற்றிருப்பதை வெற்றிக்களிப்பாக வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பைத்தியக்காரத்தனம் – பத்திரிகையாளர் சாகர்

கேம் ஆப் த்ரோன்ஸ் சீசன் 8 அமித் ஷா எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மகாராஷ்டிராவில் என்ன ஒரு பைத்தியக்காரமான திருப்பம் என விமர்சித்து உள்ளார்.

மேலும் சுமந்த் சி ராமன் உள்பட ஏராளமானோர் மகாராஷ்டிரா மாநில அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 144 உறுப்பினர்கள் தேவையப்படும் நிலையில், பாஜகவின் 105 இடங்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் முடிவு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இறுதிவரை  தேசியவாத காங்கிரஸ் கட்சியை நம்பிய சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடைசி நேரத்தில் காரை விட்ட நிகழ்வு உத்தவ் தாக்கரேவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  இந்த எதிர்பாராத முடிவால் சரத்பவார் மீது  சிவசேனா கடும் கோபத்தில் உள்ளது.