மும்பை

மஹாராஷ்ட்ர மாநில மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில்  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் 25 மாட்ட பஞ்சாயத்துகளுக்கும், 10 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும், தேசிய வாத காங்கிரஸூம் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சு வார்த்தை நடத்திவருகின்றன.

காங்கிரஸ் சார்பில்  அசோக் சவாணும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுனில் தாக்கரேவும்  கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு தருவீர்களா என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு எங்கள் ஆதரவு அவர்களுக்கு தேவை என்று கேட்டால், பிறகு அதுபற்றி பேசலாம் என்று கூறினார்.