புதுடெல்லி: என்சிஆர்டிசி எனப்படும் த நேஷனல் கேபிடல் ரீஜன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் என்ற இந்திய ரயில்வே நிறுவனம், 5.6 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ளது.

ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின்கீழ், டெல்லி – மீரட் இடையில், நியூ அஷோக் நகரிலிருந்து, சஹிபாபாத் வரையிலான 5.6 கி.மீ. சுரங்க ரயில்பாதை அமைக்கும் திட்டம்தான் தற்போது சீன நிறுவனத்திற்கு சென்றுள்ளது.

மோடி அரசு ஒருபக்கம் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ஒரு முக்கியமான ரயில்வே ஒப்பந்தம், சீன நிறுவனத்திற்கு சென்றுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஒப்பந்த அனுமதியானது விதிமுறைகளின்படியே வழங்கப்பட்டது. ஒப்பந்த ஏலத்தில் பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

டெல்லி – காசியாபாத் – மீரட் இடையிலான மொத்தம் 82 கி.மீ. நீள ரயில்பாதை தொடர்பான அனைத்து சிவில் ஒப்பந்த பணிகளும், ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று என்சிஆர்டிசி செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.