சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 1,538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு கடந்த  28ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி முதல் இன்று காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பணம், விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உரிமம் பெற்ற 1538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 1,089 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்று உள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் கூறி உள்ளனர்.