சென்னை:
‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளனர்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி ‘நீட்’ மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி ஒருவர் கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நேரு நகரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் தீக்ஷா (வயது 18). அவரது தந்தையின் பெயர் பாலச்சந்திரன்.

பல் டாக்டரான இவர் கடந்த 7-ந்தேதி அன்று தனது மகள் தீக்ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த ‘நீட்’ தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

அந்த மாணவி ‘நீட்’ தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டு உள்ளது.

ஒரு கணிப்பொறி மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு காவல்துறையில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு காவல் துறை ஆய்வாளர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரிய மேடு காவல் துறையினர் 2 முறை ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பினர். அதற்கு அவர்கள் இருவரும் காவல் துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.