நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் 7வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

123

மருத்துவத்துறையில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 31ம் தேதி வெளியிட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டை சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் 7வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் 7வது இடம்பிடித்த செரின் பாலாஜி சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். முதல் ஆறு இடங்களை பிடித்தவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழக அளவில் செரின் பாலாஜி தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.