டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் அனுமதி தரும்வரை கலந்தாய்வு நடத்தப்படாது என தமிழகஅமைச்சர்கள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழக மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுமா?  என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 15% எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் தமிழகத்தில் 547 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அந்த இடங்களின்‌ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி,  வரும் (அக்டோபர்) 27-ம் தேதி முதல் நவம்பவர்  2-ம் தேதி மாலை 5 மணி வரை நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்விற்கு பதிவு செய்து கல்லூரியை தேர்வு செய்து அதனை நவம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,  நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் தரவரிசை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த விவரங்கள் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும்.
அதனையடுத்து நவம்பர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலியாக உள்ள மீதமுள்ள இடங்களுக்கு  2-ம் கட்ட கலந்தாய்வுக்காக நவம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றால், அவர்கள் மருத்துவம் பயிலும் வகையில்,  7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இது சர்ச்சையான நிலையில், கவர்னர் ஒப்புதல் தரும் வரை தமிழக மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்க சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என தமிழகஅரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.