டில்லி,

நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம்.

தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக  ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்  நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என கூறினார்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசும் சிபிஎஸ்இயும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  மாநில மொழியில் நீட் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் என்றும் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வு தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 

சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தும், அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வில் இருந்து, தமிழக மாணவர்கள் விலக்குபெறும் வகையில்,  மருத்துவ படிப்பில் 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.  அந்த அரசாணையை  சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து  தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை மீண்டும் தாமதமாகி வருகிறது.