சென்னை,

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (7ந்தேதி) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

”மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக படித்து பணியாற்றுபவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. எல்லோரையும் விட சிறப்பாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்படவில்லை.

இத்தனை ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் போராடி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது.

நீட் தேர்வு நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்” என்றார் கனிமொழி.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு  விலக்கு அளிக்க வேண்டும் என்று  மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக  கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவும், மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளார்.