மதுரை:  மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டது என்று கூறிய  அமைச்சர் செல்லூர் ராஜு, இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிதான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள நீட், ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், அடுத்த மாதம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியாகிவிட்டன. இந்த  நிலையில்,  தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டதாக கூறினார். எப்படியாவது நீட் தேர்வு தள்ளி வைக்கப்படாதா என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தேர்வு நடத்தப்படும் என்று கூறி உள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போதைய நிலைக்கு ப.சிதம்பரத்தின் மனைவி நளினிதான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தவர், தற்போது காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார்.  இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார், மக்கள் அதனை தெரிந்துகொள்வார்கள்  என்றும் கூறினார்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் வாதாடி, நீட் தேர்வை நாடுமுழுவதும் அமல்படுத்த முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.