டெல்லி:

தமிழகத்தில் மருத்துவ, பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் அந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. இந்நிலையில் யோகா, சித்தா, ஆயுர்வேத போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்ஷின் கீழ் வரும் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளது. இதன்படி சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி படிப்புகளுக்கும் 2018ம் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாகும்.

யோகா, இயற்கை முறை சிகிச்சைக்கான படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படுகிறது என மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் தெரிவித்துள்ளார்ர். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டுள்ளது.