சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளதாகவும், இதற்காக 3 ஆயிரத்து 842 மையங்கங்கள் எற்படுத்தப்பட்டு இருப்பதுடன், தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களையும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்கள் தேர்வுக்காக தயார்நிலையில் உள்ளது. 1லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுத பதிவு செய்து உள்ளனர்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சில தேர்வு மையங்களை மாற்றி இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. . இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று இருக்கும் காரணத்தினால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
மாணாக்கர்கள் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும்.
99.4 டிகிரிக்கு மேல் தேர்வர்களின் உடல்வெப்ப நிலை இருக்கும் பட்சத்தில், 20 நிமிடம் தனியாக அமரவைக்கப்படுவார்கள். அதன்பிறகும் உடல் வெப்பநிலை குறையாத பட்சத்தில் தனிஅறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம்.
தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.
தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு தேசிய முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.