சென்னை:

மிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்க தயார் என  ரெயில்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 1500 மாணவ மாணவிகளுக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்களை ஒதுக்கி சிபிஎஸ்இ வஞ்சித்து உள்ளது. இது மாணவர்களிடையே சலசலப்பை உருவாக்கி உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு எழுத தமிழகஅரசு மற்றும் தன்னார்வளர்கள் பலர் உதவி புரிய முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக தனி ரெயில் இயக்க தயாராக இருப்பதாக ரெயில்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மாணவர்களுக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.