டில்லி,

ருத்துவப்படிப்புக்கு நடைபெற்றுள்ள அகில இந்திய நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகத்தை சேர்ந்த 5 அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளார்கள்.

மருத்துவ சேர்க்கைக்கான நாட்கள் நெருங்கி உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் வெற்றியோடு திரும்புவார்கதள  அல்லது வாய்சவடால் வீரர்களாக திரும்புவார்களா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நீட் தேர்வு குறித்து, மத்திய அரசுடன் பேச தமிழக அமைச்ச்ரகள் நேற்று மாலை அவசர அவசரமாக டில்லி பயணமானார்கள். இன்று அவர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் வாங்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சட்ட திருத்த மசோதா  கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறாமல் கிடப்பில் போட்டுள்ளது.

அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்ட 5 பேர் நேற்று  இரவு டில்லி புறப்பட்டு சென்றனர்.

இன்று அவர்கள் டில்லி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்துகின்றனர்.

குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுதான் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.