ஈரோடு: நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 2வதுமுறையாக  நீட் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதற்கிடையில், மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மற்றும் டிவி மூலம் பாடங்களை போதித்து வருகிறது தமிழகஅரசு. இந்த நிலையில்,  நவம்பர் 1ந்தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் https://t.co/eXCcQlp0sD என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  அதன்படி 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.